பாவத்தின் சம்பளம் குழப்பம்
உலகத்தின் பெரு வெள்ள அழிவிற்கு பின், நோவாவின் குடும்பம் மற்றும் அவர்களோடு பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் மாத்திரம் தப்பிப் பிழைத்திருந்தன. கடவுள் நோவா மற்றும் அவரது குடும்பதிடம் “நீங்கள் பலுகி பெருகி பூமியை நிரப்புங்கள்” என கூறினார் (ஆதி. 9:1). மீண்டும் மக்கள் இப்படிப்பட்ட பெரு வெள்ளம் மூலம் பேரழிவில் அகப்படாமல் இருக்கத்தக்கதாக கடவுள் உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தினார். உடன்படிக்கையின் அடையாளமாக வானவில்லை குறித்தார். மழை வரும் நேரங்களில் தோன்றும் வானவில் மனிதருக்கும் கடவுளுக்கும் மத்தியில் அடையாளச் சின்னமாக இருந்து வெள்ளத்தின் மூலம் மக்கள் மீண்டும் அழிந்துவிடாதபடி ஞாபக குறியாக இருக்கும்.
இரத்தம் – கவனம்
மாமிசத்தையும் உணவில் சேர்த்துக்கொள்ள அனுமதித்தார். மக்கள் மாமிசம் உண்ணலாம், ஆனால் இரத்தத்தோடு அல்ல. மிருகத்தின் இரத்தம் தரையிலே சிந்தப்பட வேண்டும். மனிதரின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது என்பதை கடவுள் தெளிவு படுத்தினார். மனிதரின் இரத்தம் சிந்தப்படலாகாது. மனித இரத்தத்தை சிந்துபவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை அறிவித்து கடவுள் இரத்தத்தை குறித்து எச்சரித்து, மனிதர் அதை குறித்து கவனமுடன் இருக்கும்படி அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பிடிக்கும் பாவம்
பேழையிலிருந்து நிலத்திற்கு வந்த நோவாவின் குடும்பம் தங்களுடைய இயல்பான வாழ்கையை தொடர்ந்தனர். மற்ற உயிர்களும் பலுகிப் பெருக ஆரம்பித்தன. நோவா திராட்சை பயிரிடுகிறவரானார். ஒரு நாளில் திராட்சை மதுவை குடித்து, வெறித்து ஆடை விலகி கூடாரத்தின் நடுவில் விழுந்து கிடந்தார். காம், நோவாவின் ஒரு மகன், தன் தகப்பனின் நிர்வாணத்தை கண்டும், ஏதும் செய்யாமல், தன் சகோதரரிடத்தில் அதைக்குறித்து பரியாசம் செய்தார். சேம் மற்றும் யாபேத் எனும் நோவாவின் மற்ற இரு மகன்களும் ஒரு போர்வையை எடுத்து, பின்புறமாக நடந்துவந்து, அவர்களுடைய தகப்பன் நிர்வாணமாக இருப்பதை பார்க்காமல், தகப்பனுடைய மானத்தை மூடினார்கள்.
தன் தகப்பனுடைய நிர்வாணத்தை கண்டும் அதை குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் அதை ஏளனம் செய்த காமின் சந்ததி சபிக்கப்பட்டது. மானத்தை மூடிய சேம் மற்றும் யாபெத் ஆசீர்வதிக்கப்பட்டார்கள்.
பாவ மனிதர்கள் எப்போதும் பாவம் செய்கிறார்கள்
வெள்ளத்திற்கு பின்பு மனிதர்களின் எண்ணிக்கை பெருகத் துவங்கியது. அவர்கள் ஒரே மொழி பேசினர். ஒரே பேச்சு வழக்கும் இருந்தது. வெகு சீக்கிரமே பாவத்திற்கு வந்த தண்டனையை மக்கள் மறந்தனர். தங்களுக்கென்று ஒரு நகரத்தையும், வானளாவிய கோபுரத்தையும் கட்ட ஆரம்பித்தனர். அவர்கள் அந்த நகரத்தையும் கோபுரத்தையும் கட்டுவதற்கு அவர்களுக்கு இரண்டு முக்கியமான நோக்கங்கள் இருந்தன. முதலாவது அவர்கள் உலகத்தின் பல்வேறு இடங்களுக்கும் பரவி பெருகுவதை விரும்பவில்லை. எனவே தாங்கள் சிதறி போய்விடாமல் இருக்க தங்களுக்கு ஒரு நகரத்தை கட்ட நினைத்தனர். இரண்டாவது தங்களுடைய பெருமையை நிலைநாட்டும் விதமாக வானம் அளவு எட்டும் ஒரு கோபுரத்தையும் கட்ட ஆரம்பித்தனர்.
பாவத்தின் சம்பளம் குழப்பம்
கடவுள் மனிதரின் இருதயத்தில் அவருக்கு எதிராக எழுந்த எண்ணத்தை பார்த்து அவர்கள் மொழியை குழப்பினார். ஒருவர் பேசுவது மற்றவருக்கு புரியாத சூழல் ஏற்பட்டது. அங்கே மாபெரும் குழப்பம் நிலவியது. மக்கள் கட்டடம் கட்டுவதை கைவிட்டுவிட்டு பல்வேறு இடங்களுக்கும் சிதறிப் போனார்கள்
தாம் படைத்த எதுவுமே பலுகி பெருகும் விதத்திலேயே கடவுள் எல்லாவற்றையும் படைத்தார். மனுக்குலமும் அதற்கு அப்பாற்பட்டது அல்ல. “நீங்கள் பலுகி பெருகி பூமியை நிரப்புங்கள்” என்பது கடவுள் மனுகுலத்திற்கு கொடுத்த கட்டளைகளில் பிரதானமானது. ஆனால் மனிதர்களோ தாங்கள் எங்கும் பரவி போய்விடமல் இருக்க தங்களுக்கு ஒரு நகரத்தை கட்ட நினைத்தனர். மட்டுமல்லாது வானத்தை எட்டும் உயரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்ட நினைத்தனர். வானம் என்னும் வார்த்தை வேதாகமத்தில் பரவலாக கடவுள் வாசம்பண்ணும் இடத்தை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. வானத்தை எட்டும் உயரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்ட நினைத்தனர் என்றால் கடவுளுக்குநிகராக தங்களை உயர்த்த நினைத்தனர் என்பதே அதன் பொருள். கடவுளை புறக்கணித்து தங்களின் பெருமையை நிலை நாட்ட முயன்றனர். ஆனால் உண்மையிலேயே யார் கடவுள் என்பதை தங்கள் தோல்வி மூலம் அறிந்துகொண்டனர்.
எப்போதுமே கடவுளின் சித்தமே நிலை நாட்டப்படும். மனிதரின் பாவம் இறை சித்தத்தை நிறுத்த முடியாது. ஆனால் இதில் வருத்தப்பட ஒன்றுமே இல்லை. ஏனெனில் கடவுளின் சித்தம் எப்போதுமே சரியானது மற்றும் சிறப்பானது.
மனிதர்கள் மட்டுமல்ல, பொருளோ, பணமோ அல்லது அதிகாரமோ ஒரே இடத்தில் குவிவதை, முக்கியமாக பாவம் மனிதரை கறைபடுத்திய பின்பு, கடவுள் விரும்பவில்லை. எங்கெல்லாம் இந்த குவிதல் நடக்கிறதோ அங்கெல்லாம் பல்வேறு விதமான பாவங்கள் பெருக்கெடுக்கிறது. பொதுவாக தனி நபராக இருக்கும்போது நல்லவராக காட்சியளிக்கும் ஒரு நபர், ஒரு குழுவுடன் இணையும்போது பல்வேறு சமூக தீமைகளில் ஈடுபடுவதை நம்மால் கண்கூடாக காணமுடியும். மேலும் பணம் மற்றும் அதிகார குவிப்பில் ஈடுபடுபவர்கள் பொதுவாக அதை நேர்மையான வழியில் செய்ய முடியாது என்பதும் அப்படி குவிப்பில் ஈடுபடுபவர்கள் அதை தக்கவைக்க பல்வேறு நேர்மையற்ற பாவ வழிமுறைகளை கையாளுவார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.
அதுபோல கிராமத்தில் உள்ளவர்கள் எல்லாம் பாவமே செய்ய மாட்டார்கள் என்று சொல்வதற்க்கில்லை. ஆனால் நகரங்களில் பாவத்திற்கான வாய்ப்புகளும் வீரியமும் அதிகமாக இருப்பதையும் மறுப்பதற்க்கில்லை. தங்கள் பெருமையை நிலை நாட்டும் வண்ணம், யார் உயரமான கட்டிடத்தை கட்டுவது என்பதில் பணகார நாடுகளிடையே நடக்கும் போட்டி நாம் அறிந்தே. இப்படிப்பட்ட பெரும் பெரும் கட்டிட வேலைகளினால் இயற்கை சுரண்டலும் உழைப்பு சுரண்டலும் காலம் காலமாக நடக்கும் ஒன்று. கடவுளின் பெயரை பெருமை படுத்துவதாக கூறிக்கொண்டு பெரிய அளவில் எந்த பயன்பாடும் இல்லாத கோவில் கோபுரங்களை உயர உயர கட்டுவது உண்மையின் மனிதர் தங்களின் பெருமையை நிலை நாட்டிக் கொள்ளத்தானே!
வாக்குறுதியில் உண்மையுள்ள கடவுள்
ஏதேன் தோட்டத்தில் கடவுள் மனிதருக்கு அளித்த வாக்குறுதியை மறந்துவிடவில்லை. மக்களை பாவத்தில் இருந்து மீட்பதற்காக, எல்லவற்றிற்கும் பின்னணியில் அவர் செயல்பட்டுக்கொண்டே இருந்தார். கடவுள் தன்னுடைய திட்டத்தை செயல்படுத்த நோவாவின் மகன்களில் ஒருவரான சேமின் வழித்தோன்றல்களை கிருபையாய் தெரிந்தெடுத்தார்.
வேதாகமத்தின் கடவுள் வல்லவர். அவரை மீறி இவ்வுலகில் எவரும் செயல்பட்டுவிட முடியாது. அது மட்டுமல, அவர் நல்லவரும் கூட. அவர் நல்லவரும் வாக்குறுதியில் உண்மை உள்ளவருமாய் இருக்கிறார். இனி வரப்போகும் பாடங்கள் கடவுள் தன் வாக்குறுதியில் எவ்வளவு உண்மையுள்ளவராக இருந்தார் என்பதை பறைசாற்றுவதாக அமையும்.
நம்பிக்கையின் பலன் நீதி>>
