பாவத்தின் சம்பளம் கொலை – மனிதனின் பாவ நிலை சக மனிதனை கொல்லும் அளவுக்கு சென்றது.
ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியே அனுப்பி விடப்பட்ட ஆதாமும் ஏவாளும் தோட்டத்துக்கு வெளியே தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்தனர். ஆனால் தோட்டத்துக்கு வெளியே ஆதாம் மற்றும் ஏவாளின் வாழ்க்கை இலகுவாக இல்லை. மனுக்குலம் பாவத்தினால் கறை பட்டதன் விளைவுகளில் ஒன்று மனிதன் இனி நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்தால் மட்டுமே பிழைக்க முடியும். ஏதேன் தோட்டத்தில் அனைத்தையும் திருப்தியாக பெற்றிருந்து, மன விருப்பத்தோடு தோட்டத்தை பேணிக்கொண்டிருந்த ஆதாமுக்கும் ஏவாளுக்கும், நிர்பந்தத்தின் அடிப்படையில் வேலை செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்தால் மட்டுமே வயிற்றை நிரப்பமுடியும் என்கிற நிலை. அப்படியே உழைத்தாலும் மனம் ஈடுகொடுக்க மறுத்தது. நிலத்தில் வேறு முட்களும் விரும்பத்தகாத செடிகளும் முளைத்து உழைப்பை இன்னும் கடினமாக்கியது.
இங்கே பிரச்சனை உழைப்பு அல்ல. உழைத்தால்தான் பிழைக்க முடியும் என்கிற நிர்பத்தம். பாவத்திற்கு முன்னாலும் உழைப்பு இருந்தது. ஏதேன் தோட்டத்தை பேணி பராமரிக்க வேண்டிய பணியை கடவுள் ஆதி பெற்றோருக்கு கொடுத்திருந்தார். எனினும் அவர்களுடைய பிழைப்பு அவர்கள் உழைப்பை சார்ந்து இருக்கவில்லை. எல்லாவற்றையும் அளவில்லாமல் அவர்களுக்கு கொடுத்திருந்த இறைவனைச் சார்ந்தே இருந்தது. கடவுள் ஏற்கனவே அவர்களுக்கு தேவையான எல்லாவற்றையும் முழுமையாக கொடுத்திருந்தார். அவர்கள் செய்யவேண்டியது எல்லாம் தங்கள் விருப்பப்படி தோட்டத்தை பேணிக்கொள்ள வேண்டியதுதான்.
அடுத்ததாக இயல்பிலேயே விருப்பத்தோடு உழைக்கமுடியாத நிலை. ஏதேன் தோட்டத்தில் அவர்கள் உழைக்க வேண்டியது இருந்தாலும் அதை இயல்பாக விரும்பி செய்யக்கூடிய தன்மையும் அவர்களிடத்தில் இருந்தது. பாவம் மனுக்குலத்தை கறை படுத்திய பின் உழைக்கவேண்டும் என்கிற அந்த இயல்பான விருப்பம் மனிதனை விட்டு அகன்றது. எந்த அளவுக்கு உழைக்காமல் பிழைக்க முடியுமோ அந்த அளவுக்கு உழைக்காமல் பிழைப்பதயே பாவ மனிதன் விரும்புவான். குறைந்த உழைப்பில் அதிக வருமானத்தையும், மற்றவர்கள் உழைப்பில் வாழுவதையும், உழைப்பை சுரண்டுவதையும், ஏமாற்றி பிழைப்பதையும், வேலைக்கு சென்ற நேரத்திலிருந்து ஓய்வையுமே பாவத்தினால் கறைபட்ட மனம் விரும்பும்.
ஏவாளும் பாவத்தின் விளைவாகிய தனக்கே உரிய பிரச்சனையை சந்தித்தார். ஆதாமோடு சேர்ந்ததின் விழைவாக குழந்தைகளை பெற ஆரம்பித்தார். அவர்களைப் போன்றே குட்டியாக இருக்கும் குழந்தைகளை பார்ப்பதற்க்கு அவளுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆனால் அந்த குழந்தைகளை பெற்று எடுப்பதற்குள் ஏவாள் படும் பாடும் வலியும் இருகிறதே! சொல்லி மாளாது. இந்த ஆதாம் வேறு முன்பு இருந்ததுபோல இல்லை. எல்லாம் அவர் விருப்பப்படியே நடக்கவேண்டும் என நினைத்தார். ஏவாளுக்கோ எல்லாம் தன் விருப்பப்படி நடக்கவேண்டும் என ஆசை. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதங்களும் சண்டை சச்சரவுகளும் உண்டாயின. வெகு சீக்கிரமே ஏதேன் தோட்டத்துக்கு வெளியே அவர்களுக்கு வாழ்க்கை வெறுப்பாக இருந்தது.
மீட்பரை குறித்த எதிர்பார்ப்பு
இந்த சூழ் நிலையில்தான் பெண்ணிடத்தில் இருந்த பிறக்கப்போகும் ஒரு ஆண் மூலமாக, இன்று அவர்கள் சிக்கியிருக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமான பாவத்திலிருந்து, அவர்களுக்கு விடுதலை அளிப்பதாக கடவுள் அவர்களுக்கு கொடுத்திருந்த வாக்குத்தத்தத்தை நினைவுகூர்ந்தார்கள். அவர்கள் முதன் முதலாக ஒரு ஆண் மகனை பெற்றபோது, கடவுள் வாக்களித்த மீட்பர் இந்த மகனாக இருக்கலாம் என முதல் பெற்றோர் எண்ணியிருக்கலாம். ஏனெனில், கர்த்தரால் ஒரு மனிதனை பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு காயீன் என்று பெயரிட்டு மகிழ்ந்தார்கள். அவர்களுக்கு ஆபேல் என்று வேறொரு ஆண் மகனும் மற்றும் பல குழந்தைகளும் பிறந்தனர்.
நம்பிக்கையின் பலி
காயீனும் ஆபேலும் வளர்ந்து பெரியவர்கள் ஆயினர். ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானார், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானார். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கடவுளை ஆராதிக்கும்படியாய் தீர்மானித்தனர். ஆபேல் தன்னுடைய ஆட்டு மந்தையிலிருந்து சில கொழுமையான ஆடுகளை பலியிட்டார். காயீன் தன் நிலத்தின் காய் கனிகளை தேவனுக்கென்று படைத்தார். ஆபேலுடைய காணிக்கையை கடவுள் அங்கிகரித்து ஏற்றுக்கொண்டார். காயீனுடைய காணிக்கையையோ கடவுள் நிராகரித்தார்.
ஆபேலுடைய காணிக்கையை கடவுள் அங்கிகரித்ததற்கான காரணம் ஆபேல் கடவுளின் வார்த்தையை நம்பி அந்த நம்பிக்கையின் அடிப்படையில் கடவுளுக்குகாணிக்கை செலுத்தினார் (எபி. 11:4). இறைவனால் படைக்கப்பட்ட பாவமற்ற மனித தன்மையை பாவத்தினால் முழுமையாக கறைபடுத்திக்கொண்ட மனிதன் பரிசுத்தமான இறைவனிடத்தில் சேரும் தகுதியை இழந்துவிட்டான். பாவத்தினால் கறைபட்டுப்போன தம்பதியருக்கு பிறந்த பிள்ளைகளும் தங்கள் பெற்றோருடைய பாவ நிலையிலேயே பிறந்தனர். ஆனாலும் மனிதனை அப்படியே விட்டுவிட மனதில்லாத கடவுள், மனிதன் தன்னை அணுகவேண்டும் என்றால், பழுதற்ற சுத்தமான ஒரு மிருகம் பலியிடப்பட்டு, அதின் இரத்தம் சிந்தப்பட வேண்டும் எனவும், அப்பொழுது தற்காலிகமாக மனிதரின் பாவம் மறைக்கப்பட்டு அவர்கள் கடவுளை அணுகமுடியும் என்பதையும் கட்டளையாக கொடுப்பதை வேதாகமத்தின் சற்று பிற்பகுதியில் நாம் காணமுடியும். இதையே ஆதாமின் குடும்பத்தினருக்கும் கடவுள் சொல்லியிருக்க வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் கடவுள் எப்போதும் மாறாத தன்மை உடையவர். மட்டுமன்றி இயேசு கிறிஸ்து ஆபேலை தீர்க்கதரிசி என்று அழைப்பதையும் நாம் வேதாகமத்தில் காணமுடியும் (லூக். 11:50-51). தீர்க்கதரிசியினுடைய அடிப்படை பணியே கடவுள் சொல்வதை கேட்டு அதை மனிதருக்கு அறிவிப்பதுதான்.
கடவுளின் வார்த்தையை நம்பின ஆபேல், அதையே பின்பற்றி பழுதற்ற சுத்தமான ஒரு மிருகத்தின் இரத்தத்தை சிந்தி இறைவனிடத்தில் சேர்ந்தார். கடவுளை அது பிரியப்படுத்தியது. அதை கடவுள் அங்கிகரித்தார். காயீனோ கடவுளின் வார்த்தையை நம்பாமல், தன் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் கடவுளை அணுக முயற்சித்தார். கடவுளை அது பிரியப்படுத்தவில்லை. கடவுள் அதை நிராகரித்தார்.
முதல் கொலை
பாவத்தின் சம்பளம் கொலை. கடவுள் ஆபேலை ஏற்றுக்கொண்டு, காயீனை நிராகரித்தது காயீனுக்கு மிகுந்த எரிச்சலை உண்டுபண்ணியது. அப்போது கடவுள் காயீனோடு பேசினார். கடவுள் காயீனை நன்மை செய்யச் சொன்னார். அதாவது அவருடைய வார்த்தையை நம்ப சொன்னார். அவருடைய வார்த்தையை நம்பி அதின்படி, எப்படி அவரை அணுகினால் ஏற்றுக்கொள்வதாக அவர் கூறியிருந்தாரோ அப்படி, அவரிடம் வரச்சொன்னார். காயீன் கடவுளின் வார்த்தையை நம்பவில்லை என்றால், சாத்தான் மிக எளிதாக அவனை கட்டுபடுத்துவான், பாவம் அவனை மேற்க்கொள்ளும் எனச் சொன்னார். ஆனால் காயீனோ கடவுளின் வார்த்தையை நம்பவில்லை. இறுதியாக காயீனின் அவநம்பிக்கை அவனுடைய சொந்த சகோதரனையே கொல்லும் அளவுக்குக் கொண்டுசென்றது. ஆபேல் தனியாக இருந்த ஒரு சூழலில் ஆபேலின் இரத்தம் தரையிலே சிந்தும் அளவிற்கு, காயீன் ஆபேலை கொன்று போட்டார். மனுகுலம் முதன் முதலாக மரணத்தை சந்தித்தது. “நீ இதை உண்ணும் நாளிலே சாகவே சாவாய்” என்று சொன்ன கடவுளின் வார்த்தையை அலட்சியம் செய்த மனுக்குலத்தின் முதல் சாவே கொடூரமானதாக அமைந்தது.
கடவுள் காயீனிடம் உன் சகோதரன் எங்கே? என கேட்டார். அதற்கு காயீன், “நான் என்ன என் சகோதரனின் காவல்காரனா?” என எதிர் கேள்வி கேட்டார். “நீ தரையிலே சிந்தவிட்ட உன் சகோதரனின் இரத்தம் என்னை நோக்கி கூப்பிடுகிறது” என்றார் கடவுள். காயீன் மறைவாக செய்த கொலை, கடவுளுக்குமறைவாக இருக்கவில்லை. காயீன் கடவுளை முழுமையாக புறக்கணித்து ஓடிப்போனார். அந்தோ பரிதாபம்! எந்த மனிதன் தங்களை பாவத்திலிருந்து மீட்பான் என ஆதிப்பெற்றோர் எண்ணினார்களோ அந்த மனிதனே முதல் கொலைகாரனாக மாறிப்போனது வேதனையிலும் வேதனை! பாவத்தின் சம்பளம் கொலை யாக முடிந்தது.
கடவுளை நம்பின ஒருவனை கடவுளை நம்பாத ஒருவன் கொலை செய்து போட்டது நன்மையை தீமை வென்று விட்டது போல தோன்றலாம். ஆனால் கடவுள் ஆதாம் ஏவாள் தம்பதிக்கு சேத் என்கிற மகனை கொடுத்தார். சேத் கடவுளை நம்பக்கூடியவராகவும் தனது சந்ததியினரை கடவுளை நோக்கி நடத்தக்கூடியவராகவும் இருந்தார்.
முடிவுகள்
ஏதேனுக்கு வெளியே பாவ கறைபட்ட மனிதர்களாக, பாவ கறைபட்ட மனிதர்கள் மத்தியில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இவ்வுலகில் இந்த நிலையில் கடவுளின் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையை நம்புவதே கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கும் நன்மை. கடவுளின் வார்த்தையை நம்ப மறுப்பது பாவ செயல்களுக்கு நேராக நடத்துகிறது. கடவுள் தன்னிடம் வர அனுமதிக்கும் வழியின் மூலமாக மட்டுமே நாம் அவரிடம் போக முடியும். நமது சொந்த முயற்ச்சிகளை அவர் புறகணிக்கிறார்.
பாவத்தின் சம்பளம் பேரழிவு>>
