மனிதரின் வீழ்ச்சி

மனிதரின் வீழ்ச்சி

இந்த கட்டுரையில் மனிதரின் வீழ்ச்சி எவ்வாறு நிகழ்ந்தது என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.

தமது சாயலில் மனிதரை உருவாக்கின கடவுள், ஏதேன் தோட்டம் எனும் சிறந்த இடத்தை உண்டாக்கி மனிதரை அதிலே வாழவைத்தார். அந்த ஏதேன் தோட்டமானது இயற்கை எழில் கொஞ்சும் மிக அழகான இடம் என்பதாக வேதாகமம் விவரிக்கிறது. செழிப்பான ஆறுகள் அந்த ஏதேன் தோட்டத்தை சுற்றியோடின. பார்வைக்கு அழகான மரங்கள், மனிதர் உண்ணுவதற்கு ஏற்ற காய் கனிகள், மனிதருக்கு எந்த தீங்கும் விழைவிக்க அறிந்திராத, மனிதரோடு இசைந்து வாழும் மிருகங்கள் மற்றும் பறவைகள் என  ஏதேன் தோட்டம் மிக சிறப்பானதாக இருந்தது.

கடவுள் மனிதரைப் படைத்ததற்கான மிக முக்கியமான நோக்கங்களில் ஒன்று தாம் மனிதரோடு அன்புறவில் நிலைத்திருப்பது. கடவுள் மனிதரோடு என்றென்றும் அன்புறவோடு இருக்கவும், ஐக்கியம் கொள்ளவும் மனிதரைப் படைத்தார். கடவுள் மனிதரைப் படைத்து பின்பு அவர்கள் தாமாக வாழ்வதற்கு விட்டுவிடுகிறவராக இராமல், மனிதரை தொடர்ந்து சந்தித்து அவர்களோடு உறவாடுகிறவராக இருந்தார். ஏதேன் தோட்டத்திலே கடவுளோடு கூட மனிதரின் உறவு மிகச் சிறப்பானதாக இருந்தது.

உலகின் ஒரு சிறிய இடத்தில் உருவாக்கப்பட்டிருந்த அந்த ஏதேன் தோட்டத்தை பண்படுத்தி பாதுகாத்துக்கொள்வதும், பலுகிப் பெருகுவதும், மனுக்குலம் பெருக பெருக ஏதேன் தோட்டத்தை பூமியின் மற்ற இடங்களுக்கும் விரிவாக்குவதும் மனிதருக்கு கடவுள் கொடுத்திருந்த பொறுப்புகள்.

விழுந்து போன தூதன் லூசிபர் மற்றும் அவனது சகாக்கள்.

வேதாகமத்தின் மற்றொரு பகுதியில் விளக்கப்பட்டிருக்கிற, விழுந்துபோன தூதன் என்று பொதுவாக அழைக்கப்படுகிற லூசிபரை பற்றி இந்த இடத்தில் அறிந்துகொள்வது பின்னால் வரப்போகும் சம்பவங்களை புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். லூசிபர் என்கிற தூதனும் கடவுளால் நல்ல தூதனாகவே படைக்கப்பட்டான். ஒரு குறிப்பிட்ட தூதர் குழுவுக்கு தலைவனான லூசிபர், உன்னதமான கடவுள் வாசம் பண்ணும் கடவுளின் ஆராதனை கூடத்தின் மிக உயரிய இடத்தில் வைக்கப்பட்டான். மகிமையான கடவுளை ஆராதித்து வந்த லுசிபர் கடவுளின் மகிமையை இச்சித்து, இறைவனைப்போலாகும்படி நினைத்தான். இன்னும் சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் தான் இறைவனாக ஆகவேண்டும் என நினைத்தான். எனவே லூசிபர் இறை சமூகத்தை விட்டு தள்ளப்பட்டான். ஒரு கூட்ட தூதர்கள் அவனை பின்பற்றினார்கள். அந்த லூசிபரே வேதாகமத்தில் சாத்தான் என்று அழைக்கப்படுகிறான். அவனை பின்பற்றின தூதர்கள் பிசாசுகள்.

சாத்தான் எனும் பதத்திற்கான எளிமையான தமிழாக்கம் எதிரி அல்லது விரோதி என்பதாகும். கடவுளுக்குவிரோதமாய் கலகம் செய்து பிரிந்து சென்ற நாளிலிருந்து சாத்தானும் அவன் பிசாசுகளும் கடவுளுக்குஎதிராக செயல்படுகின்றனர். சாத்தானும் அவனது சகாக்களும் கடவுளை விரோதிக்கிறவர்களாகவும், கடவுளுக்குஉரிய எல்லாவற்றையும் விரோதிக்கிறவர்களாகவும் இருக்கின்றனர். என்றாலும் நாம் புரிந்துகொள்ளவேண்டிய உண்மை ஒன்று இங்கே இருக்கிறது. சாத்தான் கடவுளுக்குஇணையான வல்லமை கொண்டவன் அல்ல. அவன் இறைவனால் படைக்கப்பட்ட, கடவுளின் கட்டுப்பாட்டை மீறி எதையும் செய்ய திராணியற்றவன். கடவுளுக்குவிரோதமாய் கலகம் செய்து பிரிந்து சென்றவன்.

அவநம்பிக்கை – பாவம்

மனிதர் வாழ்வதற்காக ஏதேன் தோட்டத்தை உருவாக்கின கடவுள் வாழ்வளிக்கும் மரம் மற்றும் நன்மை தீமை அறியத்தக்க மரம் ஆகிய இரண்டு மரங்களை தோட்டத்தின் நடுவிலே வைத்தார்.  வாழ்வளிக்கும் மரத்தின் கனி உட்பட அனைத்து காய்கனிகளையும் உண்ணலாம் என அனுமதி அளித்திருந்த கடவுள் மனிதருக்கு ஒரே ஒரு கட்டளையை (அல்லது எச்சரிக்கை) மாத்திரம் கொடுத்திருந்தார். மனிதர் நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை மட்டும் உண்ணக்கூடாது. ஏனென்றால்  அதை உண்ணும் நாளிலே மனிதன் சாகவே சாவான் (ஆதி. 2:17) என தெளிவாக ஆதாமிடம் கூறியிருந்தார்.

ஏதேன் தோட்டத்தில் ஆதாம் மற்றும் ஏவாளின் வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்த ஓர் அமைதியான நாளில் பாம்பின் வடிவத்திலே சாத்தான் வந்து (அல்லது ஒரு பாம்பை தனது கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டு வந்து) ஏவாளிடம் பேச்சுக்கொடுத்தான். அவன் கடவுளின் வார்த்தைக்கு விரோதமாக பொய் சொன்னான். மனிதர் நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை உண்டால் அவர்கள் கண்கள் திறக்கப்பட்டு  (இதுவரை அறியாதிருக்கிற காரியங்களை அறிந்து) கடவுளுக்குஇணையானவர்களாக மாறிவிடுவார்கள் என்பதை கடவுள் அறிவார் என்றும், அப்படி மனிதர் மாறுவதை கடவுள் விரும்பவில்லை எனவும், நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை உண்ணுவதால் மனிதர் மரிக்கமாட்டார்கள் எனவும் பொய் சொன்னான். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் கடவுளின் வார்த்தையை நம்பாமல் அவ நம்பிக்கை கொள்ளும்படி மனிதரை தூண்டி ஏமாற்றினான்.

மனிதரின் வீழ்ச்சி

சாத்தானுடைய தந்திரமான பேச்சினால் ஏமாற்றப்பட்ட ஆதாமும் ஏவாளும் கடவுளின் வார்த்தையை நம்பாமல், சாத்தானுடைய பேச்சை நம்பி, இறைவனால் விலக்கப்பட்ட நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை உண்டனர். அந்த கனியை உண்ட உடனே அவர்கள் கண்கள் திறக்கப்பட்டு, தாங்கள் நிர்வாணிகளாக இருப்பதை அறிந்து திகைத்தனர். தங்களுடைய நிர்வாணத்தை மறைக்கும்படியாக அத்திமர இலைகளை இணைத்து ஆடைகளைப் போல அணிந்துகொண்டனர். கடவுள் ஏதேன் தோட்டத்திற்கு உலாவ வரும் சத்தத்தை கேட்டவுடன், கடவுளை சந்திக்கப் பயந்து, தோட்டத்தில் இருந்த மரங்களுக்கு இடையில் ஒளித்துக்கொண்டனர்.

ஆதாம் மற்றும் ஏவாளின் பாவம் மிக கொடியது, ஏனெனில் அது மிக பெரிய நபருக்கு எதிராக, மனுக்குலத்தின் மிகப்பெரிய பொறுப்பை பெற்ற நபரால் செய்யப்பட்டது. அவர்கள் கடவுளுக்கு எதிராக கலகம் செய்தனர். கடவுளின் வார்த்தையை நம்ப மறுத்து கடவுளின் எச்சரிப்பையும் மீறி கடவுள் செய்யக்கூடாது என்று சொன்ன காரியத்தை செய்தனர். அவர்கள் கடவுளை நம்பாமல், கடவுளின் வார்த்தையை நம்பாமல் போனதே கடவுள் செய்யக்கூடாது என்று சொன்ன காரியத்தை செய்வதற்க்கு அடிப்படை காரணியாக அமைந்தது. எனவே கடவுளை நம்பாமல், கடவுளின் வார்த்தையை நம்பாமல் இருப்பதே பாவம் என வேதாகமம் அழைக்கிறது.

பாவத்தின் சம்பளம் மரணம்

அவ நம்பிக்கையினால் மனுக்குலத்திற்குள் பாவம் ஊடுருவியது. மனிதரின் வீழ்ச்சி ஆரம்பமானது. மனிதருக்குள்ளிருந்த இறை சாயல் முற்றிலுமாக பாவத்தினால் கறைபட்டது. கடவுள் எது நடக்கும் என எச்சரித்திருந்தாரோ அது நடந்தது. மனிதன் அன்றே ஆவிக்குரிய மரணம் அடைந்தான். ஆதாமும் ஏவாளும் கடவுளைப் பார்த்து பயந்ததிற்க்கான காரணம் அதுதான். கடவுளோடு உள்ள உறவு உடைந்தது. கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் இருந்த தொடர்பு அற்றுபோயிற்று  (ஆவிக்குரிய மரணம்).  கடவுளோடு இணைந்திருப்பது ஜீவன் (உயிர்). கடவுளை விட்டு பிரிவது மரணம். 

அவர்கள் சாத்தானுக்கு அடிமைகள் ஆனார்கள். ஆதாமும், ஏவாளும் கடவுளின் நியாயதீர்ப்புக்கு உள்ளானார்கள். நிலமும் சபிக்கப்பட்டது. செடியிலிருந்து பிய்த்து எடுக்கப்பட்ட ஒரு இலையை போல அவர்கள் நிலை மாறிவிட்டது. அந்த இலையினால் இனி மீண்டும் போய் செடியில் ஒட்டிக்கொள்ள முடியாது. பார்க்க தற்போது பசுமையாக தெரிந்தாலும் கண்டிப்பாகவே காய்ந்துவிடும். அதைப்போலவே உயிருள்ளவரும், உயிரின் ஊற்றும் காரணருமாக இருக்கும் கடவுளோடு இருந்த ஆவிக்குரிய உறவு அறுந்து போனதின் விழைவாக  சரீர மரணமும் அடையக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அவநம்பிக்கை பாவத்தையும், பாவம் மரணத்தையும் பிறப்பித்தது.

கடவுளின் இரக்கம் வாய்ப்பளிக்கிறது

தான் உருவாக்கின மனிதர் தன்னையே புறக்கணித்த படியினால் அந்த இடத்திலேயே அவர்களை கொன்று போட்டு வேறு மனிதர்களை உருவாக்க அவருக்கு உரிமை உண்டு. அல்லது அவர்களை தன்னை விட்டு விலக்கி வைத்து அவர்களை தொடர்பு கொள்ளாமல் புரக்கணித்து விடவும் அவருக்கு உரிமை உண்டு. ஆனால் கடவுள் தான் படைத்த மனிதர்களை நேசித்தபடியினால் அவர்களை அப்படியே விட்டுவிட அவருக்கு மனதில்லை.  சாத்தானை வென்று, மனுக்குலத்தை விடுவிக்கும் ஓர் மீட்பரை அனுப்புவதாக வாக்களித்தார்.

ஒரு பெண்ணின் மூலமாக இவ்வுலகத்தில் வரப்போகும் ஆண், தங்கள் பாவத்தினாலே சாத்தானுக்கு அடிமையாகிப்போன மனுக்குலத்தை காப்பாற்றுவார் என கூறினார். அவர்கள் உயிரளிக்கும் மரத்தின் கனியை உண்ணுவதினால் தங்களுடைய பாவ நிலையிலேயே என்றைக்கும் உயிரோடிருக்கும் நிலமை வராதபடி ஏதேன் தோட்டதில் இருந்து அவர்களை கடவுள் அனுப்பிவிட்டார். இலைகளினால் தங்கள் நிர்வாணத்தை மரைத்துக்கொண்டிருந்த அவர்களுக்கு மிருகத்தின் தோலினால் ஆடை செய்து கொடுத்து அவர்கள் நிர்வாணத்தை மறைத்தார். அவர்களின் மானத்தை மறைக்க ஒரு அப்பாவி மிருகம் கொல்லப்பட்டது.

முடிவுகள்

மனுக்குலம் கடவுளோடு அன்புறவிலும் சக மனிதரிடத்திலும், இயற்க்கையோடும் இசைந்து வாழ்வதற்காகவும் படைக்கப்பட்டவர்கள். கடவுளின் வார்த்தையை நம்ப மறுத்தது (அவிசுவாசம்) கீழ்படியாமையையும், கீழ்படியாமை மரணத்தையும் (பிரிவு) கொண்டுவந்தது. கடவுளிடம் இருந்து பிரிவு, சக மனிதரிடம் இருந்து பிரிவு, இயற்க்கையிடம் இருந்து பிரிவு. இதுவே மனிதரின் வீழ்ச்சி. மனிதர் மரணமடையவோ ஏதேன் தோட்டத்திற்கு வெளியே வாழவோ படைக்கப்பட்டவர்கள் அல்ல. ஆனால் மனிதரின் பாவ நிலையில் கடவுளுடன் உறவு பாராட்ட, சக மனிதரை நேசிக்க, ஏதேனுக்குள் வாழ பெலனற்றவர்கள். கடவுளோ பெண்ணிடத்திலிருந்து பிறக்கும் ஒரு ஆண் இவைகளை சரிசெய்வார் என்பதை வாக்களித்தார்.

பாவத்தின் சம்பளம் கொலை>>

Leave a Reply