துவக்கத்தில் கடவுள்

துவக்கத்தில் கடவுள்

துவக்கத்தில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார் (ஆதியாகமம் 1:1)

துவக்கத்தில் கடவுள் … என்கிற வேதாகமத்தின் முதல் இரண்டு வார்த்தைகள் வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கும் கடவுள் அடிப்படையில் எப்படிப்பட்டவர் என்பதைக்குறித்த ஒரு சிறிய பார்வையை நமக்கு கொடுக்கிறது. இந்த முதல் வசனத்திலிருந்து நாம் இறைவனைப்பற்றி அறிந்துகொள்கிற ஒரு அடிப்படை உண்மை என்னவென்றால், “கடவுள் இருக்கிறார்”.

இந்த உலகம் படைக்கப்படுவதற்க்கு முன்பே அவர் இருந்தார். கடவுள் இருக்கிறாரா இல்லையா? என்கிற கேள்விக்கு வேதாகமத்தில் பதில் தேடினால் கிடைக்காது. இந்த கேள்விக்கு வேதாகமம் ஒரு இடத்திலும் பதில் அளிக்கவில்லை. காரணம் மிக எளிமையானது. கடவுள் இருக்கிறார் என்பது இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருடைய மனசாட்சிலும் உள்கட்டமைக்கப்பட்டுள்ளது. இயற்கையை கவனிக்கும் ஒவ்வொருவரும், இயற்கை தானாக உருவாகவில்லை, இயற்கையை படைத்த இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி உண்டு என்பதை அறிவார்கள். எனவே கடவுள் இருக்கிறார் என்கிற உண்மையில் இருந்துதான் வேதாகமம் ஆரம்பிக்கிறது. அந்த உண்மையான கடவுள் யார் என்பதுதான் வேதாகமத்தின் பேசுபொருள்.

வேதகமத்தின் இறைவனைக் குறித்த இந்த அடிப்படை உண்மையிலிருந்து நாம் அவரைக்குறித்து இரண்டு முக்கியமான முடிவுகளுக்கு வர முடியும். வேதாகமத்தின் கடவுள் நிலையானவர் மற்றும் சுதந்திரமானவர்.

வேதாகமத்த்தின் கடவுள் நிலையானவர்

வேதாகமத்தின் கடவுள் நிலையானவர் என்பது பொதுவாக காலம் அல்லது நேரத்தோடு தொடர்புபடுத்தப்பட்டு, அவர் முடிவற்ற அல்லது எல்லையற்ற காலமாக இருக்கிறவர் என்பதாக புரிந்துகொள்ளப்படுகிறது. இது உண்மைதான் என்றாலும் இதில் நாம் மனித அளவீட்டை அடைப்படையாக வைத்து கடவுளை நிர்ணயம் பண்ண முயல்கிறோம். மனிதர்களாகிய நாம் காலத்திற்க்கு கட்டுப்பட்ட, நேரத்திற்க்கு கட்டுப்பட்ட உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். உதாரணமாக ஒரு நாள் என்று சொல்லப்படுகிற கால அளவை நீட்டிக்கிற தன்மை மனிதருக்கு இல்லை. ஆனால் கடவுள் காலம், நேரம் போன்ற கட்டுப்பாடுகளை உடைய இந்த உலகம் படைக்கப்படுவதற்கு முன்பதாகவே இருந்தார் என்பது, கடவுள் இந்த கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர் என்பதை நமக்கு உணர்த்துகிறது. மனிதர்களாகிய நம்மை கட்டுப்படுத்தும் இந்த காரணிகள் கடவுளை கட்டுப்படுத்துவதில்லை, ஏனென்றால் காலம் எனும் ஒன்றை படைத்தவரே அவர்தான். கடவுள் காலத்திற்க்கு அப்பாற்பட்ட நித்திய நிலையானவராக இருக்கிறார்.

வேதாகமத்தின் கடவுள் சுதந்திரமானவர்

கடவுள் காலத்தால் கட்டுப்படாதவர் என்பது, அவர் முழுமையாக சுதந்திரமானவர் என்பதை புரிந்துகொள்ள உதவிசெய்கிறது. அவர் எதற்காகவும் பிறரை சார்ந்திருக்க அவசியமற்றவர். மனிதர்களாகிய நாம் சுதந்திரமாக இருப்பதை குறித்து பேசினாலும், நம்மால் பிறரை சாராமல் வாழ முடியாது. நாம் நம்முடைய தினசரி அடிப்படை தேவைகளுக்காக கூட பிறரை சார்ந்தே வாழ்கிறோம். நாம் சாப்பிடும் ஒரு நேர உணவு நமது கையில் வந்து கிடைக்க எத்தனை நபர்களுடைய உழைப்பு தேவைப்படுகிறது. ஆனால் வேதாகமத்தின் கடவுள் தன்னில் தானே முழுமையானவராகவும், தன்னுடைய எந்த தேவையையும் நிறைவேற்றிக்கொள்ள எதையும்/யாரையும் சார்ந்திருக்க அவசியமற்றவராகவும் இருக்கிறார்.

கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார்

வேதாகமத்தின் தேவனே எல்லாவற்றையும் படைத்தவர். இன்று நாம் கண்களால் காண்கிற, மற்றும் நவீன அறிவியலின் உதவியோடு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிற, ஆனால் வெற்றுக் கண்களால் காணமுடியாத (அறிவியலால் இன்றளவும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கிற அல்லது கண்டுபிடிக்கமுடியாமல் இருக்கிற) எல்லாவற்றையும் படைத்தவர் வேதாகமத்தின் கடவுளே.

கடவுள் வானத்தை… படைத்தார்

வானம் எனும் வார்த்தை வேதாகமத்தில் இரண்டு வெவ்வேறு பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. முதலாவது பூமி தவிர்த்து பூமிக்கு வெளியே இருக்கிற அண்ட சராசரம். அறிவியலின் உதவியோடு இந்த அண்ட சராசரம் எவ்வளவு பெரியது என்பது ஆராயப்பட்டிருக்கிறது. நாம் வாழும் பூமி அமைந்திருக்கக்கூடிய, பல்வேறு கோள்களும் கோடிக்கணக்கான நட்ச்சத்திரங்களும் உள்ள சூரிய மண்டலம், கோடிக்கணக்கான நட்ச்சத்திர மண்டலங்கள் அமைந்த பால்வெளி அண்டம், பால்வெளி அண்டத்தை போலவே கோடிக்கணக்கான அண்டங்கள் என பூமிக்கு வெளியே எல்லையற்று இருக்கும் அண்ட சராசரங்களையும் படைத்தவர் வேதாகமத்தின் கடவுள்.

இரண்டாவது கடவுள் மற்றும் அவரது பணிவிடைக்காரர்கள் என்று அழைக்கப்படுகிற இறை தூதர்கள் வாழ்கிற, பொதுவாக பரலோகம் என்று அழைக்கப்படுகிற, ஆவிசார்ந்த இடம். இதுவும் வானம் என்றே பொதுவாக அறியப்படுகிறது ஆவிசார்ந்த என்றால் திட மற்றும் திரவ பொருளாக இல்லாத, மனித கண்களால் நேரடியாக பார்க்க முடியாத, உருவமற்ற என பொருள்படும். இந்த இடம் எப்போது படைக்கப்பட்டது என்பதைப் பற்றி வேதாகமத்தில் எங்கும் குறிப்புகள் இல்லை .  ஆனால் பூமி படைக்கப்படுவதற்க்கு முன்பே படைக்கப்பட்டுவிட்டது. கடவுள் தன் இருப்பிடமாக கூறுவது இந்த இடத்தைத்தான். இந்த இடத்தில் கடவுளோடு வாசம் செய்யும் இறை தூதர்களை கடவுளே படைத்தார் என்பதும், பூமி படைக்கப்படுவதற்க்கு முன்னமே அவர்கள் படைக்கப்பட்டு விட்டார்கள் என்பதும் வேதாகமத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆவிசார்ந்த  இடத்தையும் உயிர்களையும் கடவுள்  படைத்தார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். மேற்கண்ட பகுதியில் இருந்து கடவுளைப்ப்ற்றி வேதாகமம் சொல்லுகிற ஒரு உண்மையை புரிந்துகொள்ள வேண்டும். அது கடவுள் ஆவியாக இருக்கிறார். ஒரு ஆவிக்குரிய இடத்தில், ஆவிக்குரிய உயிர்கள் நடுவில் வாழும் கடவுள், தானும் ஆவியாகவே இருக்கிறார். எனவே அவர் உருவம் அற்றவராகவும், மனித கண்களால் நேரடியாக பார்க்க முடியாதவராகவும் இருக்கிறார்.

கடவுள் வாசம்பண்ணுகிற ஆவிக்குரிய இடமாகிய பரலோகத்தில் வசிக்கும் ஆவிக்குரிய உயிர்களாகிய இறை தூதர்களைப் பற்றி இந்த இடத்தில் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

ஏராளமான இறை தூதர்களை கடவுள் படைத்தார், ஆனால் முடிவில்லாத எண்ணிக்கையில் அல்ல. தன்னை ஆராதிக்கும்படியாகவும், தனக்கு பணி செய்யும்படியாகவும் கடவுள் இறை தூதர்களை படைத்தார். இறை தூதர்கள் மிகுந்த பெலன், அறிவு, உணர்ச்சி, மற்றும் சுய சித்தம் உள்ளவர்கள் என வேதாகமம் கூறுகிறது.

கடவுள்… பூமியைப்படைத்தார்.

கடவுள் பொருள்சார்ந்த உலகத்தையும், ஊனுடல் பெற்ற உயிர்களையும் படைத்தார். இந்த பூமியையும் அதில் இருக்கும் அனைது உயிர்களையும் கடவுளே படைத்தார் என வேதாகமம் கூறுகிறது. கடவுள் எல்லாவற்றையும் (மனிதன் தவிர) தன் வார்த்தை மூலமாக படைத்தார்.

கடவுள் ஆதாம் மற்றும் ஏவாளைப் படைத்தார்

துவக்கத்தில் கடவுள் மனுக்குலத்தை உருவாக்கினார். கடவுளாகிய கர்த்தர் பூமியிலிருந்து மண்ணை எடுத்து மனிதனை உருவாக்கினார். அவன் மூக்கில் தன் உயிர் மூச்சினை கடவுளாகிய கர்த்தர் ஊதினார். அதனால் மனிதன் உயிர் பெற்றான் என வேதாகமம் கூறுகிறது (ஆதி 2:7). மனிதன் வெறும் ஊனுயிர் மட்டுமல்ல அவனுக்குள் கடவுள் கொடுத்த ஆத்துமா இருக்கிறது. மனிதன் ஆவி மற்றும் பொருள்  இரண்டின் அற்புதமான கலவை. கடவுள் மனுக்குலத்தின் முதல் பெற்றோராகிய ஆதாம் எனும் ஆணையும் ஏவாள் எனும் பெண்ணையும் உருவாக்கினார். கடவுள் ஆணை மண்ணினாலே உருவாக்கி அந்த மனிதனுடைய ஒரு பகுதியை பிரித்தெடுத்து  அதனாலே பெண்ணை உருவாக்கினார்.

மனுக்குலத்தை கடவுள் தமது சாயலில் உருவாக்கினார்.

கடவுள் ஆவியாய் இருக்கிறார். அவருக்கு உருவம் இல்லை. எனினும் கடவுள் மனுக்குலத்தை தமது சாயலில் உருவாக்கியதாக வேதாகமம் கூறுகிறது. எனவே மனிதரில் இருக்கும் கடவுளின் சாயல் என்பது உடல் சார்ந்ததாக இராமல் உயிர் சார்ந்ததாக இருக்கிறது. கடவுள் அறிவுள்ளவர். மனிதரையும் அறிவுள்ளவராக உருவாக்கினார். கடவுள் உணர்ச்சிகள் உள்ளவர். மனிதரையும் உணர்ச்சிகள் உள்ளவர்களாக உருவாக்கினார். கடவுள் சுய சித்தம் உள்ளவர். மனிதரையும் சுய சித்தம் உள்ளவர்களாக உருவாக்கினார்.

வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கும் கடவுள் நிலையானவர், சுதந்திரமானவர், அனைத்தையும் படைத்தவர். அவர் மனிதர் கட்டுப்படுத்துகிற கடவுள் அல்ல. மனிதரை படைத்து கட்டுப்படுத்தும் வல்லமையுள்ள கடவுள். இயற்கையினால் கட்டுப்படுத்தப்படும் கடவுள் அல்ல. இயற்கையை படைத்து கட்டுப்படுத்தும் கடவுள். கடவுள் மனிதரை தமது சாயலிலும், அடிப்படையில் ஆவிக்குரியவர்களாகவும் படைத்த படியினால், மனிதர் தம்மை படைத்த கடவுளோடு தொடர்பு கொள்வது சாத்தியமாகவே உள்ளது. அவர் உருவம் அற்றவராய் இருப்பதினால் அவரை எந்த உருவத்தோடும் ஒப்பிட்டு பார்ப்பது தவறானதாகும்.

மனிதரின் வீழ்ச்சி>>

Leave a Reply